மறுமை வாழ்வு

குளச்சல் சாதிக்.

          ஆராய்ச்சி மற்றும் பகுத்தாய்வு அடிப்படையில் கிடைக்கப் பெறும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. ஆகவே, இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும், பகுப்பாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடோ நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமானதொன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் மனிதர்களை இறைவனை வணங்குமாறும் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வில் நம்பிக்கை கொள்ளும்படியும் போதித்து வந்துள்ளனர். மறுமை வாழ்வின்மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழிவகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொறுளற்றதாக்கி விடும் எனும் அளவுக்கு அவர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டுகால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வை அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இடைவெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அனைத்து இறைத்தூதர்களும் பெரும்பாலும் மக்களின் எதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கியக் காரணம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையிலும் ஏராளமான நல்லறத்தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப்பழக்கவழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாறுபட்டதோடல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியார்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது. தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமைப்படுத்தியது எது? பதில் மிக எளிது. அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தைப் புலனறிவின் மூலமாகவா உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு, ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலங்களால் உணர முடியாத விசயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.

          இதனால்தான் இறைவனையும், மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைதூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலைவணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்கரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது:

          "நம் மீது அவன் உவமைகளைப் பொருத்துகின்றான். தன் பிறப்பைப் பற்றியே அவன் மறந்துவிடுகிறான். இந்த எலும்புகள் மக்கிப் போன பிறகு இவற்றை உயிப்பிப்பவர் யார் என்று அவன் கேட்கிறான். எவன் முதலில் அவற்றை படைத்தானோ (அவனே மறுபடியும்) அவற்றை உயிர்ப்பிப்பான் என்றும் படைப்புக் கலையின் வித்தைகள் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன் அவனே என்றும் அவனிடம் கூறுங்கள். அவனே உங்களுக்காக பசுமையான மரங்களிலிருந்து நெருப்பைப் படைத்தான். அதனைக் கொண்டு நீங்கள் நெருப்பை மூட்டிக் கொள்கின்றீர்கள். விண்ணையும், மண்ணையும் படைத்த அவனுக்கு அவர்களைப் போன்றவற்றைப் படைக்கும் ஆற்றல் இல்லையா? ஏன் இல்லை, படைப்பதில் வல்லவனும் யாவற்றையும் அறிந்தவனும் அவனே!" (அல்குர்ஆன் 36:78-81)

           இன்னொரு இடத்தில், மறுமைவாழ்வு மறுப்பிற்கு சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை என்று குர்ஆன் கூறுகிறது:

          அவர்கள் கூறுகின்றனர்: "இப்பொழுதுள்ள உலகைத் தவிர வேறு எதுவும் இல்லை; நாம் வாழ்கிறோம். பின்னர் இறந்துவிடுகிறோம். காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை". இதைப்பற்றி அவர்களுக்கு யாதொரு அறிவுமில்லை. அவர்கள் வீண் கற்பனாவாதிகள். அவர்கள் முன் நமது வசனங்கள் ஓதிக்காண்பிக்கப் பட்டால், "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், எங்களுடைய மூதாதையர்களைக் கொண்டு வாருங்கள்" என்ற வாதத்தைத் தவிர, வேறு எதுவும் சொல்வதில்லை.   (அல்குர்ஆன் 45:24-25)

         இறந்தோர் அனைவரையும் எழுப்ப இறைவனால் நிச்சயம் முடியும். ஆனால், இறைவனுக்கு சுயமான திட்டங்கள் உண்டு. ஒருநாள் வரும். அன்று உலகமனைத்தையும் இறைவன் அழித்துவிடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய வாழ்வின் துவக்க நாளாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண், பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீவினைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனையை இறைவனால் அன்று அளிக்கப்படுவர்.

          மனிதனின் ஆன்மீக தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன், மறுமைவாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப் பின் வாழ்வு இல்லையென்றால், இறைநம்பிக்கையென்பதும் அர்த்தமற்றதாகிவிடும். அப்படியே ஒருவர் இறைவனை நம்பினாலும் நீதி நியாயமற்ற இறைவனைத்தான் நம்ப வேண்டியிருக்கும். படைத்ததோடு தனது பணி முடிந்தது; மனிதனின் நடவடிக்கைகளைப் பற்றி சிறிதும் அக்கறையற்ற இறைவனையே நம்பவேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. நிச்சயமாக இறைவன் நீதமிக்கவன். வரை முறையின்றி கொடுமைபுரிந்தவர்கள், அப்பாவி உயிர்களைப் பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தனது மன இச்சைக்கேற்ப ஆடும்படி மக்களை அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சயம் தண்டிப்பான். மனிதன் இவ்வுலகில் மிக அற்ப காலமே வாழ்கிறான். சொற்பகால இச்சடவுலகில் மனிதனின் தவறுகள் அல்லது நற்பண்புகளுக்கேற்ப சரிசமமாக தண்டனை அல்லது வெகுமதி வழங்குவது இயலாத காரியம். நியாயத்தீர்ப்புநாள் வந்தேதீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது. செய்த நன்மை அல்லது பாவங்களுக்கேற்ப ஆண்,பெண் இருபாலருக்குமே இறைவன் தீர்ப்பளிக்கிறான்.

          இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்: "அந்த நாள் எமக்கு வரவே வராது". கூறும்: "எனதிறைவன் மீதாணையாக, நிச்சயமாக அது வந்தே தீரும். மறைவானவைகளைப் பற்றி இறைவனே மிக அறிந்தவன். அணுவின் எடையைவிட குறைந்ததாயினும் அல்லது அதிகமாயினும் சரி, வானத்திலிருந்தாலும், பூமியிலிருந்தாலும் இறைவனிடமிருந்து தப்பவே முடியாது; அனைத்தும் தெளிவாகப் பதிவேட்டிலிருக்கும். எவர்கள் இறைவனை நம்பி நல்லவைகளைச் செய்தார்களோ அத்தகையோருக்கு வெகுமதியுண்டு. அத்தகையோருக்கு மன்னிப்பும் உண்டு. யார் நமது வசனங்களைப் புறக்கணித்தாரோ, எதிராக வாதிட்டாரோ அத்தகையோருக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 34:3-5)

          இறைவனின் கருணையும் நீதியும் முழுஅளவில் மறுமைநாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளைச் சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமை நாளைப் புறக்கணித்து இறையருளை மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். இறையடியார்கள் மற்றும் பாவிகளின் மாறுபட்ட நிலைமைக் குறித்து குர்ஆன் இப்படிச் சுட்டுகிறது.

          எவனுக்கு நாம் நல்வாழ்க்கை அளித்து, அதை அவனும் அடைய இருக்கிறானோ அவனும், இவ்வுலக வாழ்வின் சுகங்களை அளித்துப் பின்னர் மறுமை நாளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவனும் சமம் ஆவார்களா? (அல்குர்ஆன் 28:61)

          எல்லையற்ற மறுமைவாழ்வின் தயாரிப்பினை இவ்வுலகில் செய்துகொள்ளவேண்டும் என்று குர்ஆன் மேலும் கூறுகிறது. ஆனால், இதனை மறுப்பவர்கள் தமது மன இச்சைக்கும் ஆசைக்கும் அடிமையாகி இறைநம்பிக்கையாளர்களையும், நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத்தருவாயில் தமது தவறுகளை உணர்ந்து கொள்வர். தமக்கு இவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது அவர்கள் புலம்புவார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படும். மரணத்தருவாயில் பாவிகள் அல்லல்படும் நிலைமை, இறுதி தீர்ப்பு நாளின் பயங்கரம், சத்தியவாதிகளுக்கு வாக்களிக்கப்பட்ட நற்பேறு இவையனைத்தும் மிக அழகாக குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது:

         "அவர்களில் யாருக்கேனும் மரணம் வந்தாலோ அவன் கூறுகிறான்: "என் இறைவா! திரும்ப அனுப்பிவிடு. இனி நல்ல காரியங்களையே செய்து கொண்டிருப்பேன். ஆனால் அது நடக்காது. அவன் ஒரு வார்த்தைதான் பேசுவான். அவர்களுக்கு முன் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையிலும் ஓர் அரண் ஏற்பட்டுவிடும். சூர்-எக்காளம் ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே எந்த உறவும் இருக்காது. ஒருவர் மற்றவரைப் பற்றி விசாரிக்கமாட்டார். எவர்களுடைய எடை கனக்கிறதோ, அவர்களே வெற்றியடைவர். யாருடைய எடை குறைகிறதோ அத்தகையோர் நஷ்டத்திற்குள்ளாகி நரகத்தில் வீழ்ந்து கிடப்பர். அங்கு நெருப்பு அவர்களின் முகங்களைப் பொசுக்கும். அங்கு விகாரமாகிப் போவார்கள்". (அல்குர்ஆன் 23:99-104)

          மறுமை நம்பிக்கை மனிதனுக்கு தீர்ப்புநாளின் வெற்றியை மட்டும் அருளவில்லை. இவ்வுலகில் மனிதன் தனது பொறுப்பையுணர்ந்து தனக்குரிய பணியினைச் செம்மையாக, முறையாக ஆக்ககரமமாகச் செய்து உலகை அமைதியும் இன்பமும் நிரம்பியதாகச் சமைக்கவும் வழி கோலுகிறது.

         அன்றைய அரேபிய மக்களை ஒருகணம் எண்ணிப் பாருங்கள். மறுமை நாள் மீதான நம்பிக்கை இல்லாதிருந்த அந்தக் காலத்தில் அவர்கள், கொலை, கொள்ளை, சூதாட்டம், மது, இனச்சண்டை போன்றவைகளில் தீவிரமாக மூழ்கிக் கிடந்தனர். ஓரிறைக்கொள்கை மற்றும் மறுமை மீதான நம்பிக்கை கொண்ட நாள் முதலாய் அவர்கள் உலகின் மிக ஒழுக்கமான சமுதாயமாக, பண்பட்டு நின்றனர். பாவங்களை விட்டொழித்தனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி புரிந்தனர். வறியோருக்கு ஈந்தனர். சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். மறுமை நம்பிக்கை அடுத்த உலகில் தொடர்வினைகளை ஏற்படுத்த வல்லதைப் போன்றே இவ்வுலகிலும் உண்டாக்க வல்லது. ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கைகளைப் புறக்கணித்தால் அங்கு அனைத்துப் பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும்; இலஞ்ச ஊழல்கள் பெருகும்; இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும். ஆத், ஸமூத், ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் அழிவைப் பற்றி குர்ஆன் விபரமாகக் கூறுகிறது.

          "ஆத், ஸமூத் கூட்டத்தார் தீர்ப்புநாளை நம்பவில்லை. ஸமூத் கூட்டத்தார் மின்னலைக் கொண்டு அழிக்கப்பட்டனர்; ஆத் சமூகத்தினர் விரைந்து தாக்கும் சூறைக்காற்றால் அழிக்கப்பட்டனர்.. ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள்மீது அவன் அதை வீசச் செய்தான். வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போன்று அந்த கூட்டத்தார் பூமியில் விழுந்து கிடந்ததை நீர் கண்டிருப்பீர். அவர்களில் எவரும் தப்பி இருப்பதை நீர் காண்கிறீரா? ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலைகீழாய் புரட்டப்பட்ட ஊர்களில் இருந்தவர்களும் அதேபோன்றுதான். அவர்கள் தவறு செய்தனர். இறைத்தூதருக்கு எதிராக மாறு செய்தனர். அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக் கொண்டான். நீர் பொங்கியபொழுது நிச்சயமாக நாம் உங்களை ஓடும் கப்பலில் ஏற்றினோம் - அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாகவும், செவிமடுப்பவருக்கு சிந்தையில் வைப்பதற்கும்! ஒருமுறை சூர்-எக்காளம் ஊதப்பட்டு , பூமியும் மலைகளும் ஒன்றோடொன்று மோதிப் பலமாக அடிபட்டால், அந்நாளில்தான் யுகமுடிவு நிகழும். வானம் வெடிக்கும். பயங்கரம், பீதி ஆட்கொள்ளும். யாருடைய பதிவேடு வலக்கரத்தில் கொடுக்கப்பட்டதோ அவர் கூறுவார்: "இதோ எனது புத்தகத்தை எடுத்துப்பாருங்கள்! நிச்சயமாக நான் கேள்வி கணக்கை எதிர்பார்த்திருந்தேன் என்று கூறுவார். ஆகவே அவர் மேலான கவனத்தில் மகிழ்வோடிருப்பார். அங்கு கனிகள் கைக்கெட்டும் நிலையிலிருக்கும். கடந்த நாட்களில் நீங்கள் சேகரித்தவை காரணமாக நன்கு இவைகளைப் புசியுங்கள்; பருகுங்கள்! யாருக்கு பதிவேடு இடக்கையில் கொடுக்கப்பட்டதோ அவன் கூறுவான்: "எனக்கு பதிவேடு கொடுக்கப்படாமல், கணக்கையே அறியாமல் இருந்திருக்கக் கூடாதா? இறந்தபோதே (என் கதையும்) முடிந்திருக்கக் கூடாதா? என்னுடைய செல்வம் எனக்கு பயனளிக்கவில்லையே! எனது ஆதிக்கமும் என்னைவிட்டு நீங்கிவிட்டதே!" (அல்குர்ஆன் 69:4-29)

         இதனால் மறுமைநாள் பற்றி சிந்தனைக்கு ஆதாரம் உள்ளதை இவ்வாறாக உணரலாம்.

முதலாவதாக,

         எல்லா இறைத்தூதர்களும் மக்களை அதனை நம்புமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

 இரண்டாவதாக,

          ஒரு சமுதாயம் மறுமை நம்பிக்கையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டால் அது அமைதி நிரம்பிய தலைசிறந்த சமுதாயமாக விளங்கும். அங்கு சமூக இழிவும், ஒழுக்கக்கேடும் இருக்காது.

மூன்றாவதாக,

         இறைத்தூதர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்ததை மதிக்காமல், மறுமை நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக ஒரு சமூகம் புறக்கணிக்குமாயின் அச்சமூகம் முழுவதுமே இறைவனால் அவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நான்காவதாக,

          மனிதனின் ஆத்மீக, பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு தேட்டங்கள் மறுமைவாழ்வை உறுதிப்படுத்தி அங்கீகரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

ஐந்தாவதாக,

          இறப்பிற்குப் பின் ஒரு வாழ்வு இல்லையென்றால் இறைவனின் கருணைக்கும், நீதிக்கும் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போகிறது.

Refer this page to your friends / relatives

   Previous                  Tamil Articles               Next