உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம்

தமிழில்: ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம்

தொகுத்து வழங்கியது: மு.சாதிக்.

அசையாத அடித்தளம் - உறுதியான அடிப்படை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனும், அகிலத்தாரின் இரட்சகனுமான அல்லாஹ்விற்கே புகழனைத்தும். தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில், மனிதர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் பகிரங்க வழிகேட்டிலிருந்த நிலையில் தெளிவான சத்தியத்தையும், நேர்வழியையும் அல்லாஹ்வால் கொடுத்தனுப்பப்பட்ட இறுதித்தூதர் நபிகளார் (ஸல்) அவர்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும், நல்லாசியும் உண்டாவதாக! அவனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு இவர்களின்மூலம் நேர்வழி காட்டினான்.

அவர்களது உண்மை நிலையை மக்கள் அறிந்ததும் அவர்களை பின்பற்றினார்கள். அச்சமூகம் அவர்களிடம் பொய், மோசடி, மடமை போன்ற எந்த குறையையும் காணவில்லை. அவர்களின் வாழ்வு உண்மை உரைத்தல், வாக்கை நிறைவேற்றுதல், இரக்கம் காட்டுதல், கொடைகொடுத்தல் போன்ற நற்பண்புகள் நிறைந்ததாகவே இருந்தது. அவர்கள் நாற்பது வருடங்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்திருந்தும் அவர்களின் எந்த ஒரு செயலையும் அவர்கள் நிராகரிக்கவில்லை. அவர்களுக்கு வஹீ - இறைத்தூது கிடைத்ததும் நேர்வழியின்பால் மக்களை அவர்கள் அழைத்தார்கள். எதன்பால் அம்மக்களை அவர்கள் அழைத்தார்களோ, அக்கொள்கையை பூரணமாக கடை பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். அப்பாதையில் அவர்கள் சந்தித்த துயரங்களை பொறுமையுடனும், அது வெற்றி பெறும் என்பதில் எல்லையற்ற உறுதியுடனும் இருந்தார்கள்.

மேலும் அல்லாஹ்விற்காக இம்மார்க்கத்தை தூய்மையாக்கி அவர்களுக்கு முன் வந்த நபிமார்களை கண்ணியப்படுத்தி அவர்கள் அனைவரையும் விசுவசித்தார்கள். ஆனால் அவர்கள் எழுத, வாசிக்க தெரியாதவர்களாக இருந்தும் ஆச்சரியமிக்க மகத்தான வேதநூல் அல்குர்ஆனை கொண்டு வந்தார்கள். இதன்மூலம் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் சவால்விட்டார்கள்.

 அல்லாஹ் கூறுகின்றான்: இந்தக் குர்ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்றுசேர்ந்தாலும் அவர்கள் கொண்டு வரமாட்டார்கள். அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே! (அல் இஸ்ரா:- 17:88)

அவர்களின் நபித்துவம் உண்மைப் படுத்தப்பட்டது. அவர்களின் அறிவுரைகள் அனைத்தும் வெற்றியடைந்தன. அவர்களின் அனைத்து திட்டங்களும் உயர்வடைந்தன. நிச்சயமாக அவர் அழகிய மார்க்கத்தை கொண்டுவந்தார். அம்மார்க்கம் பகுத்தறிவிற்கு மதிப்பளிக்கக்கூடியதாகவும், மனித நலங்களை வளர்க்கக்கூடியதாகவும், எடுத்து நடப்பதற்கு இலகுவானதாகவும், அனைத்திலும் நீதி நிறைந்ததாகவும், மனிதனின் இயல்பிற்கு பொருத்தமானதாகவும், இயற்கைக்கு அமைவாகவும், அதனை தூய்மைப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இதனால் களங்கமில்லாத தெளிவான இதயங்கள் அதை ஏற்றுக் கொண்டு பற்றிப் பிடித்துக்கொண்டன. தமது சகல துறைகளிலும் அதனை நடைபோடும் பாதையாகவும் மீள் பரிசீலனை செய்யும் மூலாதாரமாகவும் ஆக்கிக்கொண்டன. இதுவே சத்தியமாகும். சந்தேகமின்றி சத்தியம் வெற்றியேபெறும்.

அல்லாஹ் கூறுகிறான்:- நபியே! கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக இறுதிமுடிவு இறையச்சமுடையோர்களுக்கேயாகும். (அல்குர் ஆன்: ஹூத்11:49)

பலமான கட்டிடம்

தொடர்புகளில் மிக்க மேலானது அல்லாஹ்வை நேசித்து, அவனது மார்க்கத்தை நிலைநாட்டுவதன்மூலம் அவனை விசுவாசங்கொண்ட உங்களுக்கிடையில் உருவாகின்ற நேசமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர். (அல்மாயிதா 5:56)

இவ்வசனம் சகோதரத்துவ தொடர்பின் அடிப்படையை அதன் கொள்கையுடன் இணைத்துக் காட்டுகின்றது.

நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே. எனவே உங்களுடைய இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள். (அல் ஹூஜ்ராத் 49:10)

அல்லாஹ் கூறுகின்றான்:- விசுவாசங்கொண்ட ஆண்களும், விசுவாசங்கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உற்றத் தோழர்களாக இருக்கின்றனர். (அத்தௌபா 9:71)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- நீங்கள் அல்லாஹ்வை விசுவாசங் கொள்ளாதவரை சுவர்க்கம் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் நேசம் கொள்ளாதவரை விசுவாசியாக மாட்டீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் நேசம் வைக்கின்ற ஒரு காரியத்தை உங்களுக்கு நான் சொல்லித் தரட்டுமா? எனக்கூறிவிட்டு, அதுதான் உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்புவதாகும் எனக் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் ஸ்கோதரராவார். (ஆதாரம்: முஸ்லிம்)

நபிகளார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும், ஒரே உடலுக்கும் ஒப்பிட்டார்கள். அவர்களது தோழர்கள்தான் அதற்குரிய உண்மையான உதாரண புருஷர்களாவார்கள். அன்ஸாரிகளான மதீனாவாசிகள் மக்காவாசிகளான முஹாஜிரீங்களுக்கு செய்த உதவிகளைப் பற்றி அல்லாஹ் கூறும்போது,

(முஹாஜிரீங்களாகிய) அவர்களுக்கு முன்பே (மதீனாவில்) ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்களான (அன்ஸாரிகள்) தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். மேலும் (ஹிஜ்ரத் செய்துவந்த) அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை பற்றி தங்கள் நெஞ்சங்களில் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமாட்டார்கள். தங்களுக்கு கடும் தேவையிருந்தபோதிலும், தங்களைவிட (முஹாஜிரீங்களான) அவர்களையே (உதவி பெறுவதற்கு) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். (அல் ஹஷ்ர் 59:9)

வெளிப்படையான சிறப்பம்சங்கள்

"முஸ்லிம்" என்ற பெயரை அறியாதோர் எவரும் இருக்க முடியாது. நபிமார்களில் இறுதியான நபிகளார் (ஸல்) அவர்களை பின்பற்றக் கூடியவர்களுக்கு அல்லாஹ் இப்பெயர்ரை தெரிவு செய்தான். விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் உங்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி செய்யுங்கள். அவன்தான் உங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றான். இம்மார்க்கத்தில் அவர் எந்த ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. உங்களுடைய தந்தை இப்றாஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்). அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல் ஹஜ் 22:78) அல்லாஹ் தனது மகத்தான வேதத்தில் இவர்களை சிறப்பித்து கூறுகின்றான். எனவே அவர்களுக்கு மற்றவர்களுடைய வேதநூல்கள் தேவைப் படவில்லை. அவர்களின் கிப்லாவாக அவனது இல்லங்களில் மிகவும் தூய்மையான மஸ்ஜிதுல் ஹறாமை தேர்ந்தெடுத்தான். அதில்தான் மக்கள் ஹஜ், உம்ரா செய்கின்றார்கள். தொழுகைக்காக அழைப்பதை அழகிய திக்ராகவும் அவன் ஆக்கியிருக்கின்றான்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:- முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்றுகூடி நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர் கிறிஸ்தவர்களைப் போன்று மணியடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்களைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா? என்றனர். உடனே நபிகளார் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழைப்பீராக! எனக் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை வணங்குவதற்காக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேருவார்கள். அந்நாளில்தான் அல்லாஹ் மனிதர்களை படைத்தான். அதில்தான் அவர்கள் திரும்பவும் எழுப்பப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈதுல் ஃபித்ர், ஈதுல் அழ்ஹா என்ற இரு பெருநாட்கள் உண்டு. அவ்விரு நாட்களிலும் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி, அவனைப் பெருமைப்படுத்தி, தர்மமும் செய்வார்கள். எனினும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொந்தமான மார்க்கத்திலும், பழக்க வழக்கங்களிலும் மாற்று மதத்தினருக்கு ஒப்பகுவதை எச்சரித்துள்ளான்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- எவர் எக்கூட்டத்தினருக்கு ஒப்பாகின்றாரோ அவர் அக்கூட்டத்தினரை சேர்ந்தவராவார். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல், அவனது திருப்தியையும், கூலியையும் நாடுதல் போன்ற அடிப்படை அம்சத்தோடன்றி முஸ்லிம்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் நிலைபெறாது.

அல்லாஹ் தனது நல்லடியார்களைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்:- அல்லாஹ்வின்மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டோருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாம் உணவளிப்பது அல்லாஹ்வின் முகத்தை நாடித்தான். உங்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்துவதையோ நாங்கள் விரும்பவில்லை. எனக்(கூறுவர்) (அத்தஹ்ர் 76:8-9) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:- அவர்கள் (தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து பொருட்படுத்தாது விட்டுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மிகக் கிருபையுடையவனுமாவான். (அந்நூர் 24:22)

மக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாததாகும். அதற்குரிய பரிகாரம் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனைக்கொண்டும், நபிகளார் (ஸல்) அவர்களின் ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பளிப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:- விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் உங்களில் கீழ்ப்படிந்து நடக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். ஆனால் எந்த விசயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டீர்களோ அதனை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவராக இருந்தால் இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அந்நிஷா 4:59)

இதனால்தான் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களும், இமாம் ஷாபி(ரஹ்) அவர்களும் ஹதீஸுக்கு எமது கூற்று ஒத்ததாக இருந்தால் அதுதான் எங்களது மத்ஹபாகும் எனக்கூறினார்கள். குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் சட்டத்தைதேடிச் செல்வது கல்வி சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கும், சமுதாயத்தில் எழும் சகலவிதமான சிறிய, பெரிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகின்றது. மேலும் முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டியவைகளில் மிக மகத்தானது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவன் விலக்கியவற்றை தவிர்த்து, அவனது மார்க்கத்தை பாதுகாத்து, அதற்காக உதவிசெய்து, அதன்பால் மக்களை அழைத்து, அவர்களின் தனித்துவத்தையும், அடிப்படை அம்சங்களையும் பாதுகாப்பதாகும். பின்வரும் அல்லாஹ்வின் வார்த்தையை சிந்திப்போருக்கு அதன் உண்மைநிலை தெரியவரும்.

எவர்கள் தங்களை நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றார்களோ அவர்களிடமிருந்து உறுதிமொழியை நாம் வாங்கியிருக்கின்றோம். (ஆனால்) அவர்கள் எதைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பகுதியை (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில் தங்களுக்கு நினைவு படுத்தப்பட்டதை) மறந்துவிட்டார்கள். அதனால் அவர்களிடையே விரோதத்தையும், குரோதத்தையும் மறுநாள்வரையில் (நீங்காதிருக்குபடி) நாம் மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு தெரிவிப்பான். (அல்மாயிதா 5:14)

பனூ இஸ்ரவேலர்கள் தீமையைத்தடுக்காது, அதை செய்துகொண்டிருந்ததனால் அவர்களில் நல்லோர்களின் இதயங்கள், தீயோர்களின் இதயத்துடன் கலந்துவிட்டதுபோல் முஸ்லிம்களுக்கும் இக்கதி ஏற்படக் கூடாதென்பற்காக முஸ்லிம்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் சிறப்பான இப்பணியை விட்டுவிடுவதை நபிகளார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் பாவங்களில் மிகப்பெரியது அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும். மேலும் அவனது மார்க்கம் சொல்லாத்தைக்கொண்டு தீர்ப்பளிப்பது, அவனது பகைமைகளைத் தோழமைக் கொள்வது அவனது மார்க்கத்தில் ஒன்றை பரிகசிப்பது வணக்க வழிபாடுகளில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துவது நல்லோர்களை (பெரியார்களை) அழைத்து பிரார்த்திப்பது. அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவது சிகிற்சைக்காக அல்லது அதுபோன்ற ஒன்றிற்காக சூனியக்காரர்கள், குறிசொல்பவர்கள், மந்திரக்காரர்களிடம் செல்வது போன்றவைகளை குறிப்பிடலாம். அத்தீமைகளில் அல்லாஹ்வின் கடமைகளை பாழடிப்பதையும் கொள்ளமுடியும். பாவத்தின் முன்னணியில் தொழுகை, ஸகாத் போன்றவற்றை அலட்சியம் செய்வதை குறிப்பிடலாம்.ஏனெனில் முஸ்லிமை முஸ்லிமாக கணிப்பதற்குரிய நிபந்தனையாக அவ்விரண்டையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அவர்கள் (தங்கள் பாவங்களிலிருந்து) விலகி பாவமன்னிப்புத்தேடி, தொழுகையையும் நிறைவேற்றி ஸகாத்தையும் கொடுத்து வந்தால் அப்பொழுது அவர்கள் உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்களாவார்கள். (அத்தௌபா 9:11)

பரவலாக காணப்படக்கூடிய பெரும்பாவங்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இசைக்கருவிகள், போதைபொருட்கள், விபச்சாரம், பெண்கள் அழகை வெளிப்படுத்துதல், வட்டி, இலஞ்சம், கலப்படம், ஏமாற்றுதல், பொய், புறம், பெற்றோர்களை நோவினைச் செய்தல், உறவினர்களைத் துண்டித்தல், மனைவிமார்களுக்கு அநியாயம் செய்தல் போன்றவையாகும். இணைவைப்பு மற்றும் இவை போன்ற தீய அம்சங்கள் நிறைந்ததாகத்தான் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் அரேபியத்தீப கற்பம் காட்சியளித்தது. இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஆட்சியாளர் முஹம்மத் இப்னு ஸூஊத் (ரஹ்) போன்றவர்களை அல்லாஹ் இப்பூமியில் உருவாக்குகின்றவரை அம்மக்களுக்கிடையில் அச்சம், பகைமை, பிரிவினை நிறைந்து காணப்பட்டது. இவ்விருவரும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களிடம் நிலைநாட்டுவதற்கும், தீமைகளிலிருந்து நாட்டை தூய்மைப் படுத்துவதற்கும் பாடுபட்டார்கள்.எனவே ஒற்றுமை ஏற்பட்டு பாதுகாப்பும், நன்மையும் உருவானது. இதற்கு இப்போதுள்ள சவூதி அரேபியாவை ஒரு சான்றாக கொள்ளமுடியும்.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

Refer this page to your friends / relatives

Tamil Articles                           Home Page                           Next