தருமம் தலை காக்கும்

அபூமுனீறா - கோட்டார்.

நாம் பெற்ற மக்களும் நாம் சேர்த்த செல்வமும் - இறைவன்

சோதிக்கத்தந்ததே என்பதை மறவாதீர்!

நல்வழியில் பொருளீட்டி நேர்மையாய் செலவிட்டால்

நற்கூலி நமக்குண்டு இறை தருவான் செலவிடுவீர்!

நம் அன்னை-தந்தையரை நன்றியுடன் கவனித்தால்

நிம்மதியாய் சுவனமதை அடைந்திடலாம் கவனிப்பீர்!

உற்றார் உறவினரை உகப்புடனே ஆதரித்தால்

வற்றாத "கவ்ஸர்" நீர் பருகிடலாம் ஆதரிப்பீர்!

அண்டை அயலாரை அன்புடனே நேசித்தால் இறைத்

தண்டனையின்றியே தப்பிடலாம் நேசிப்பீர்!

அனாதை மக்கள்தமை ஆறுதலாய் அரவணைத்தால்

அண்ணலார் நபியுடனே அமர்ந்திடலாம் அரவணைப்பீர்!

இல்லையென வருவோர்க்கு இல்லையெனா தீவோர்க்கு

தொல்லையிலா சுகவாழ்வு தந்திடுவான் ஈந்திடுவீர்!

பஞசமென தஞ்சம்புக தம்மிடத்தே வருவோர்க்கு

தாராளம் உதவிடுவீர்! தயங்காது வழங்கிடுவீர்!

கஞ்சத்தனம் கருமித்தனம் முஃமின்களின் செயலல்ல

கருணையுள்ள அல்லாஹ்வின் அடியார்க்கிது அழகுமல்ல!

மனமுவந்து தருமங்கள் மகிழ்வோடு செய்வோர்க்கு-இறைவன்

மருத்துவமனைச் செல்லாது காத்திடுவான் செல்விடுவீர்!

உண்ணுவதில் பருகுவதில் வீண்விரையம் செய்வோர்க்கு

இறைநேசம் கிட்டாது செய்யாதீர் வீண்விரையம்!

தருமங்கள் தலைகாக்கும் தீவினைகள் தூராக்கும்

தலைவிதியை மாற்றிவிடும் இறைவன் அல்லாஹ் நாடிடுவான்!

நாளையது  நமதல்ல-நம்முடன் வருவது எதுவுமல்ல

நற்செயல்கள் செய்திடுவீர்! நல்சுவனம் அடைந்திடுவீர்!

Refer this page to your friends / relatives

No Copyright ©2006-2011 darulsafa.com 

All Rights Reserved.